திங்கள், 8 பிப்ரவரி, 2010

நினைவோட்டம் 17

அரியலூரில் இரண்டு ஆண்டுகள் (ஆறாம் வகுப்பு & ஏழாம் வகுப்பு) தான் படித்தேன் என்றாலும் கற்றுகொண்டது அதிகம் தமிழ்,ஆங்கிலம் மற்றும் ஹிந்தி பேச்சு போட்டிகளில் கலந்துகொண்டதின் மூலம் பேச்சுத்திறனையும் பெற்றேன்.கைத்தொழில் பாடமாக தச்சு தொழில் இருந்ததால் அதையும் ஓரளவு கற்றேன். தனியாக கடைக்கும் சந்தைக்கும் சென்று பொருள்கள் வாங்கும் பயிற்சியையும் பெற்றேன்.

தேர்வு முடிந்து விடுமுறைக்கு ஊருக்கு வந்தபோது அப்பா 'ஒரு சில காரணத்தால் அங்கே படிப்பை தொடர முடியாது என்றும், என்னை எட்டாம் வகுப்புக்கு எங்கள் ஊருக்கு அருகில் இருந்த ஸ்ரீமுஷ்ணம் என்ற ஊரில் இருந்த தனியார் பள்ளியில் சேர்க்க இருப்பதாகவும்' கூறினார்கள். விடுமுறை கழிந்து அப்பாவுடன் அரியலூர் போய் பள்ளி மாற்று சான்றிதழ் பெற்றேன்.

மாமாவின் கெடுபிடி காரணமாக, அரியலூரை விட்டு வருவது மனதில் ஒரு மகிழ்ச்சியை கொடுத்தாலும், அந்த ஊரையும் அந்த வீட்டையும் விட்டு பிரிவது என்னவோ போல் இருந்தது உண்மை. மாமாவின் வீட்டில் முன்பக்க வராண்டாவை அடுத்த அவரது அறையில், அவரது நாற்காலிக்கு பின்னால் கண்ணாடி பதித்த அலமாரியில் 'பைண்ட்' செய்யப்பட்ட Madras law journal புத்தகங்களையும், சுவற்றில் மாட்டியிருந்த அட்டையில் இருந்த

'பிறர் உனக்கு என்ன செய்யவேண்டுமென்று நினைக்கிறாயோ அதையே நீ பிறர்க்கு செய்'

'ஒருவன் உன்னை வலது கன்னத்தில் அறைந்தால் உனது இடது கன்னத்தைக்காட்டு'

என்ற வாசகங்களையும் மாமா இல்லாதபோது கண்கொட்டாமல் பார்ப்பது எனது வழக்கம். (ஒரு வேளை நாமும் மாமாவைப்போல் வழக்கறிஞர் ஆகி அவரைப்போல் அந்த மாதிரி சூழலில் பணியாற்றவேண்டும் என்ற ஆசையின் காரணமாக அது இருந்திருக்கலாம்)

அப்பாவுடன் ஊருக்கு கிளம்பும்போது அவைகளை திரும்பவும் ஒரு ஆவலோடு பார்த்துவிட்டு, ரயிலேறி பெண்ணாடம் என அழைக்கப்படும் பெண்ணாகடத்திற்கு வந்து சேர்ந்தோம்.

நினைவுகள் தொடரும்

வே.நடனசபாபதி

2 கருத்துகள்: